கேரள வியாபாரிகள் வருகை குறைவு: வாழைத்தார்கள் விற்பனை வீழ்ச்சி
- ஓணம் பண்டிகை வருகிற 5-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- ஒரு கிலோ நேந்திரன் வாழை ரூ.45 முதல் ரூ.50 வரை விலைக்கு விற்பனையாகும்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.
இங்கு விளைவிக்கப்படும் நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாளி, ரோபஸ்டா போன்ற வாழை ரகங்கள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
குறிப்பாக நேந்திரன் வாழைத்தார்கள் 80 சதவீதம் வரை கேரள வியாபாரிகளால் வாங்கப்படுகிறது.
மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் நால்ரோடு பகுதியில் செயல்படும் ஏல மையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு மொத்த வியாபாரிகள் ஏலம் மூலம் வாழைத்தார்களை வாங்கி செல்கிறார்கள்.
ஆண்டுதோறும் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை கணக்கிட்டு இங்குள்ள வாழை விவசாயிகள் நேந்திரன் வாழையை அதிகளவில் பயிரிடுவது வழக்கம். இந்த ஆண்டும் அதுபோன்று வாழைகள் பயிரிட்டு இருந்தனர்.
ஆனால் கடந்த மாதம் வீசிய கடும் சூறாவளி காற்றின் காரணமாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன.
இதனால் வாழைத்தார் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. முழுமையாக வளராத வாழைத்தார்கள் பெருமளவில் ஏல மையங்களுக்கு வந்ததால் உரிய விலை கிடைக்கவில்லை.
கேரள வியாபாரிகளின் வருகையும் குறைந்து விட்டது. இதனால் சராசரி விலை கூட கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து வாழை விவசாயிகள் கூறியதாவது:-
ஓணம் பண்டிகை வருகிற 5-ந்தேதி கொண்டாடப்படுகிறது. ஓணம் விழா காலங்களில் போட்டி போட்டுக்கொண்டு நேந்திரன் வாழைத்தார்களை கேரள வியாபாரிகள் வாங்கி செல்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டு கேரள வியாபாரிகள் வரவில்லை. இதனால் வாழைத்தார்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஓணம் பண்டிகை மாதத்தில் ஒரு கிலோ நேந்திரன் வாழை ரூ.45 முதல் ரூ.50 வரை விலைக்கு விற்பனையாகும். ஆனால் தற்போது ரூ.25-ல் இருந்து ரூ.35க்கு மட்டுமே விற்பனையாகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.