`அறிவாலயத்தில் உள்ள ஒரு புல்லை கூட அண்ணாமலையால் புடுங்க முடியாது'- ஆர்.எஸ்.பாரதி
- அறிவாலயத்தை புடுங்குவேன் என்று சொன்னவர்கள் எல்லாம் தூள் தூளாகிவிட்டனர்.
- தொண்டர்களுக்கு எழுச்சியும், உணர்ச்சியும் ஏற்படுமே தவிர சோர்வடையமாட்டார்கள்.
சென்னை:
சென்னை திருவான்மியூர் பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும் போது, கவர்னரும், அண்ணாமலையும் தமிழகத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் பேசி வருவது ஆணவத்தின் உச்சம். நான் இங்கேயே தான் இருப்பேன். அறிவாலயத்தில் இருக்கும் ஒவ்வொரு செங்கலையும் உருவி எடுக்கும் வரை இருப்பேன் என்று பேசினார்.
அண்ணாமலையின் பேச்சுக்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டமாக பதில் தெரிவித்துள்ளார்.
அறிவாலயத்தை புடுங்குவேன் என்று சொன்னவர்கள் எல்லாம் தூள் தூளாகிவிட்டனர். காணாமல் போய் விட்டார்கள். எனவே அண்ணாமலையும் அந்த வரிசையில் இடம் பெற போகிறார். அறிவாலயத்தில் உள்ள ஒரு புல்லைக் கூட அண்ணாமலையால் புடுங்க முடியாது.
தி.மு.க.வை அழிப்பேன், ஒழிப்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம் மொத்த பேரும் அழிந்து போயிருக்கிறார்கள். இதுதான் வரலாறு. இதெல்லாம் அண்ணாமலைக்கு தெரிய வாய்ப்பில்லை.
இந்த மாதிரி அண்ணாமலை பேசுவதால் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுச்சியும், உணர்ச்சியும் தான் ஏற்படுமே தவிர யாரும் சோர்வடையமாட்டார்கள்.
அதுமட்டுமல்ல 2026-ல் ஊழல் பெருச்சாளிகள் சிறைக்கு செல்வதை பார்க்கும் வரை இருப்பேன் என்கிறார். 2026 அல்ல 3026-ல் கூட அது நடக்காது.
இப்படியே அவர் பேசுவது நல்லதுதான். தி.மு.க.வுக்கு ஒரு சோதனை என்றால் தலைவர் கலைஞர் சொல்வார் தூங்கினால் என் தொண்டன் கும்பகர்ணன். எழுந்திரிச்சி நின்றால் இந்திரஜித். அந்த வகையிலே இந்த மாதிரி பேசினால், தி.மு.க. காரர்கள் அத்தனை பேரும் இந்திரஜித் ஆவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.