அறியாமையில் பேசுகிறார்: அதிமுக-வை கட்டிக்காக்கிறது யார்? என்ற விஜய் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
- எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை கட்டிக்காக்கிறது யார்?.
- அந்த கட்சி இப்போ எப்படி இருக்கிறது. நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனுமா என்ன?.
மதுரை மாநில மாநாட்டில் த.வெ.க. தலைவர் விஜய் பேசும்போது, "எம்ஜிஆர் யார் தெரியும்ல.., அவரது மாஸ்னா என்னதுன்னு தெரியும்ல.., அவர் உயிரோடு இருக்கும் வரைக்கும் முதலமைச்சர் சீட் குறித்து யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியல.., கனவு கூட காண முடியல.., எப்படியாவது முதலமைச்சர் பதவியை தன்னிடம் கொடுங்கள். எம்.ஜி.ஆர். வந்த உடன் அவரிடம் கொடுக்கிறேன் என தன்னுடைய எதிரியையும் கெஞ்ச வைத்தவர். கெஞ்ச வைத்தவர். அதனால..,
சிறிது நேரம் பேச்சை நிறுத்தி, ஆனா இப்போ அவர் ஆரம்பித்த அந்த கட்சியை, கட்டிக்காக்கிறது யார்?. அந்த கட்சி இப்போ எப்படி இருக்கிறது. நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனுமா என்ன?. அப்பாவி தொண்டர்கள் வேதனையை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாக்கு போடனும், எப்படி பட்ட ஆட்சி அமையனும் அந்த அப்பழுக்கற்ற தொண்டர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் பாஜக என்ன வேசம் போட்டு வந்தாலும், தமிழ்நாட்டில் அவர்கள் வித்தை வேலைக்கு ஆகாது" எனக் கூறியிருந்தார்.
இதற்கு மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சி பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற உரையில் எடப்பாடி பழனிசாமி பதில் கொடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் புனிதமான பூமி. அதிமுக என்பதே அண்ணாவின் பெயரையும், கொடியில் அண்ணாவின் உருவத்தையும் கொண்டது. இந்த புனித பூமியில் பேசுவதே என் பாக்கியம். காஞ்சிபுரமே குலுங்கும் அளவுக்கு கடல் போல் காட்சியளிக்கிறது. அடுத்தாண்டு அதிமுகவின் வெற்றிக்கு இங்கிருக்கும் மக்களின் ஆரவாரமே சாட்சி.
அதிமுக மக்களுக்கு சேவை செய்ய தொடங்கப்பட்ட இயக்கம். தீயசக்தி திமுக-வை வீழ்த்த இந்த கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கினார். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அண்ணாவின் எண்ணத்தை நிகழ்த்தி காட்டியவர் எம்ஜிஆர். அண்ணா, எம்ஜிஆர், அம்மா மறைந்தாலும் மக்கள் மனதில் பூமி உள்ளவரை நிலைத்து நிற்பார்கள். எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றியவர்கள்.
யாரெல்லாம் புதிய கட்சி தொடங்குகிறார்களோ அவர்களும் நம் தலைவர்களை சொல்லித்தான் துவங்க முடியும். சிலர், அதிமுக யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள். பாவம் அறியாமையில் பேசுகிறார்கள். இதுகூட தெரியாமல் கட்சிக்குத் தலைவராக இருந்தால் உங்களை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள்.?
இங்கிருக்கும் அவ்வளவு பேரும் அதிமுக தொண்டர்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசி வருகிறார்கள். அதிமுக அப்படியல்ல, ஏழை ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்குத் திட்டங்களைத் தீட்டி அதன்மூலம் ஏற்றம் பெற்ற கட்சி. மரம் உடனே வளராது, செடி வைத்து தண்ணீர் ஊற்றி பின்னர் தான் பூப்பூத்து காய்காய்க்கும். அப்படித்தான் ஒரு இயக்கமும், எடுத்தவுடனே எந்த இயக்கமும் மக்களுக்கு நன்மை செய்துவிட முடியாது.
எம்ஜிஆர் கட்சி தொடங்கி 5 ஆண்டுகாலம் தன்னுடைய உழைப்பைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்தார், அம்மாவும் அப்படித்தான் எடுத்தவுடன் முதல்வர் ஆகவில்லை, மக்களுக்கு உழைத்துதான் முதல்வரானார். பேறறிஞர் அண்ணா எடுத்தவுடனே முதல்வர் ஆகவில்லை. நிறைய போராட்டங்களை சந்தித்தார், மொழிக்காக சிறை சென்றார். நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்கு தன்னையே அர்ப்பணித்தார்.
நம் தலைவர்கள் எல்லாம் அர்ப்பணித்து வாழ்ந்து அதிமுகவை அடையாளம் காட்டிச் சென்றனர். அதனால்தான் அதிமுக நிறைய திட்டங்களைக் கொடுத்தது. தமிழகம் இந்தளவு உயர்ந்ததிருப்பதற்கு 31 ஆண்டுகள் மக்களுக்காக நாட்டுக்காக அதிமுக உழைத்ததுதான் காரணம்.
அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொடுத்திருக்கிறோம். கல்வியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தினார் அம்மா, அதிக நிதி ஒதுக்கினார். அதிமுக ஆட்சியில்தான் நிறைய கல்லூரிகளைக் கொண்டுவந்து கல்வியை உயர்த்தினோம். 10 ஆண்டுகளில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து வரலாற்று சாதனை படைத்தோம். 67 கலை அறிவியல் கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல், வேளாண், கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையம் என நிறைய கல்லூரிகளைத் திறந்த ஒரே அரசு அதிமுக அரசு.
ஏழை மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்க அடித்தளமிட்டது அதிமுக அரசு. அது தெரியாமல் சிலர் கட்சி ஆரம்பித்த உடனே இமாலய சாதனை படைத்தது போல பேசுறாங்க, நாங்க அப்படியல்ல, இங்கிருப்பவர்கள் உழைப்பால் அடையாளம் காட்டப்பட்டவர்கள், உழைப்புதான் நிலைக்கும். தொழிலிலும், அரசியலிலும் உழைத்தால்தான் ஏற்றம் பெற முடியும், அதுவும் அதிமுகவில் மட்டும்தான், வேறு எந்தக் கட்சியிலும் வரமுடியாது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.