தமிழ்நாடு செய்திகள்

மதுரை முதலீட்டாளர் மாநாட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தம்- முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது

Published On 2025-12-07 10:58 IST   |   Update On 2025-12-07 10:58:00 IST
  • வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மதுரையிலிருந்து விமானம் மூலமாக புறப்பட்டு சென்னை வருகிறார்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து நேற்று மாலை மதுரை சென்றிருந்தார்.

இன்று காலையில் மதுரையில் மக்கள் விடுதலை கட்சி நிறுவனர் முருகவேல் ராஜன் இல்லத் திருமண நிகழ்சியில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

அதன் பிறகு மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு வளர்கிறது என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த மாநாட்டில் மொத்தம் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றின் வாயிலாக ரூ.36,660.35 கோடி மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது.

இதன் மூலம் 56 ஆயிரத்து 766 இளைஞர்களின் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மேலூரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இவற்றைத் தொடர்ந்து, இன்று மதுரையில் நடைபெறும் அரசு விழாவில் 63 ஆயிரத்து 698 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும், ரூ. 3 ஆயிரத்து 65 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்துப் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றுகிறார்.

மேலும் ரூ.150.28 கோடி செலவில் மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றபின் மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.18,795 கோடியில் 18,881 வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றி உள்ளார்.

மேலும், ரூ.8,668 கோடியில் 96 லட்சத்து 55 ஆயிரத்து 916 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 27 ஆயிரத்து 463 கோடி மதிப்பிலான பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதுதவிர மதுரையில் 2.4 லட்சம் சதுர அடியில் 8 தளங்களுடன் கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ரூ.216 கோடி மதிப்பீட்டில் கட்டி 15.7.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு உலகப் புகழ்ப்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் 16 ஏக்கர் பரப்பளவில் 5 தளங்களுடன் கூடிய மாபெரும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி 24. 1. 2024 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் சார்பில், 2021-க்குப்பின் மதுரை மாவட்டத்திற்கு அனைத்து வகையிலும் பெருமை சேர்த்து வருகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மதுரையிலிருந்து விமானம் மூலமாக புறப்பட்டு சென்னை வருகிறார்.

Tags:    

Similar News