சின்னமனூர் அருகே மழை வெள்ளம் சூழ்ந்து 5 ஆயிரம் வாழைகள் சேதம்
- வயல்களுக்கும் தண்ணீர் சென்றதால் அப்பகுதி விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
- சுமார் 30 ஏக்கருக்கு மேல் நெல் வயல்கள் முற்றிலும் வெள்ளப்பெருக்கில் மூழ்கியது.
சின்னமனூர்:
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகவும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், குச்சனூர், கூலையனுர் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இங்கு கரைகளை உடைத்து கொண்டு கட்டுக்கடங்காத வெள்ளம் வயல்வெளிக்குள் சீறிப்பாய்ந்ததால் உலகநாதன் என்பவருக்கு சொந்தமான 5000 வாழை மரங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. அருகில் உள்ள வயல்களுக்கும் தண்ணீர் சென்றதால் அப்பகுதி விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
மேலும் அறுவடைக்கு காத்திருந்த சுமார் 30 ஏக்கருக்கு மேல் நெல் வயல்கள் முற்றிலும் வெள்ளப்பெருக்கில் மூழ்கியது. ஆர்ப்பரித்துச் சென்ற வெள்ளத்தினால் மயான எரியூட்டு மையம் நீரில் மூழ்கியது. தொடர்ந்து அதிகரித்து வரும் வெள்ள பெருக்கால் கரைகள் உடைப்பெடுத்து மேலும் வெள்ளம் சூழும் அபாயம் உள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.