தமிழக சிறைகளில் உயர்கல்வி படித்து வரும் 440 கைதிகள்
- 2024-25-ம் நிதியாண்டில் மொத்தம் 9 ஆயிரத்து 106 சிறைவாசிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
- 24 பேர் வணிக மேலாண்மை இளங்கலை பட்டப்படிப்பையும், 268 பேர் பட்டய படிப்பையும் படித்து வருகின்றனர்.
சென்னை:
சிறைவாசிகளுக்கு 100 சதவீத கல்வி அறிவை புகட்டும் விதமாக தமிழக அரசும், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் ஒருங்கிணைந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, அனைத்து சிறைகளிலும் எழுதப்படிக்க தெரியாத சிறைவாசிகளுக்கு பள்ளி கல்வித்துறையின் சிறப்பு கல்வியறிவு திட்டத்தின் மூலமாக அடிப்படை கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தால் பயன் அடைந்து வரும் சிறை கைதிகள் குறித்து சிறைத்துறை உயர் அதிகாரி கூறியதாவது:-
அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனி சிறைகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறை ஆகியவற்றில் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை கொண்ட ஆரம்ப பள்ளிகள் மற்றும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மகாத்மா காந்தி சமுதாய கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன.
2024-25-ம் கல்வி ஆண்டில் சிறை கைதிகளில் 135 பேர் பிளஸ்-2 தேர்வும், 137 பேர் பிளஸ்-1 தேர்வும், 247 பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும், 232 பேர் 8-ம் வகுப்பு தேர்வும் எழுதி உள்ளனர்.
2024-25-ம் நிதியாண்டில் மொத்தம் 9 ஆயிரத்து 106 சிறைவாசிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 24 பேர் வணிக மேலாண்மை முதுகலை பட்டப்படிப்பும், 3 பேர் கலை அறிவியல் முதுகலை படிப்பும் படித்து வருகின்றனர். ஒருவர் கணினி முதுகலை பட்டப்படிப்பும் படித்து வருகிறார்.
120 பேர் கலை, அறிவியல், வணிகவியல், இலக்கியம் ஆகியவற்றில் இளங்கலை பட்டப்படிப்பும், 24 பேர் வணிக மேலாண்மை இளங்கலை பட்டப்படிப்பையும், 268 பேர் பட்டய படிப்பையும் படித்து வருகின்றனர்.
'கத்தியை தீட்டாதே...புத்தியை தீட்டு' என்ற அறிவுரையை ஏற்று சிறை கைதிகள் மனம்மாறி கல்வி கற்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.