பழனி மலைக்கோவிலில் கும்மி, ஒயிலாட்டம் ஆடிய பெண்கள்.
பழனி முருகன் கோவிலில் கும்மி, ஒயிலாட்டம் ஆடிய பெண்கள்- நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
- கிரி வீதி, அடிவாரம், மலைக்கோவில் உள்ளிட்ட இடங்களில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து வருகின்றனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு மாதமும் திருவிழா கொண்டாடப்படுவதால் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஆடி மாதம் என்பதால் பக்தர்கள் வருகை மேலும் அகரித்துள்ளது. இதனால் கிரி வீதி, அடிவாரம், மலைக்கோவில் உள்ளிட்ட இடங்களில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மின் இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம், படிப்பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் மலை க்கோவிலுக்கு சென்றனர். மேலும் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சரி செய்தனர். பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை பகுதியை சேர்ந்த அம்மன் கலைக்குழு சார்பில் கும்மி, ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள், சிறுவர், சிறுமிகள் என 100-க்கும் மேற்பட்டோர் முருகப்பெருமானின் புகழ் பாடல்களுக்கு மேள இசைக்கு ஏற்ப கும்மி, ஒயிலாட்டம் ஆடினர். இதை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கண்டு ரசித்தனர். மேலும் தங்களின் செல்போனில் புகைப்படமும் எடுத்தனர்.