ஊத்துகோட்டை அருகே ரூ.40 லட்சம் மதிப்புள்ள மின்கம்பிகள் திருட்டு- 2 வாலிபர்கள் கைது
- குஞ்சலம் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ரூ.30 கோடி செலவில் துணைமின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
- திருட்டு நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள குஞ்சலம் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ரூ.30 கோடி செலவில் துணைமின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்குவதற்காக மின்சாதன பொருட்கள் அங்கு குவிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதில் 2 டன் எடையுள்ள ரூ.40 லட்சம் மதிப்புள்ள பித்தளை கம்பிகள் மாயமாகி இருந்தது. அதை மர்ம நபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து மின்சார வாரிய பொறியாளர் கிருஷ்ணகுமார் பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
ஊத்துக்கோட்டை, அண்ணா நகரில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக சென்ற மினி லாரியில் 2 டன் எடையுள்ள பித்தளை கம்பிகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக திருத்தணியை பஜார் தெருவைச் சேர்ந்த பெரியசாமி, ரத்னசாமி ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு நடந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.