தமிழ்நாடு

கொடைக்கானலில் வெப்பத்தை தணித்த திடீர் மழையால் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Published On 2024-04-12 05:48 GMT   |   Update On 2024-04-12 05:48 GMT
  • ஏரியில படகு சவாரி செய்வது மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
  • மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வரும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு கோடைகாலம் தொடங்கியது முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் இருந்தது. தற்போது ரம்ஜான் பண்டிகை முதல் தொடர் விடுமுறை வருவதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் நகரின் அனைத்து இடங்களிலும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளது. தரைப்பகுதியை போலவே கொடைக்கானலிலும் பகல் பொழுதில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இருந்த போதும் ஏரியில படகு சவாரி செய்வது மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் கொடைக்கானலில் நேற்று நள்ளிரவு முதல் நகர் பகுதியிலும், மலை கிராமங்களிலும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் பிடியில் சிக்கி தவித்த உள்ளூர் மக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானலில் பல்வேறு வனப்பகுதியிலும், தனியார் பட்டா இடங்களிலும் கோடைகாலம் தொடங்கியது முதல் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மரங்கள், மூலிகை செடிகள் கருகி வந்தன.

தற்போது பெய்துவரும் மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வரும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஏரிச்சாலை, கலையரங்கம், மூஞ்சிக்கல், கல்லறைமேடு, அப்சர்வேட்டரி உள்ளிட்ட இடங்களில் சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்தபடி சென்றன.

Tags:    

Similar News