ஜெராக்ஸ் கடை மீது 3 நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கடையை நோக்கி வீசியுள்ளனர்.
- வெடிக்காமல் உள்ள நாட்டு வெடிகுண்டை, வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்தவர் வானமாமலை (வயது 50). இவர் நாங்குநேரி நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். மேலும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக உள்ளார்.
இன்று காலையில் வழக்கம் போல் வானுமாமலை மற்றும் அவரது மனைவி 9 மணியளவில் கடையை திறந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கடையை நோக்கி வீசியுள்ளனர்.
அந்த வெடிகுண்டு வெடிக்கவில்லை. தொடர்ந்து இரண்டாவது குண்டை எடுத்து வீசும் போது கடையில் முன்பு விழுந்து வெடித்தது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது குண்டை கீழே போட்டுவிட்டு அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நாங்குநேரி போலீஸ் டி.எஸ்.பி. அசோக் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிக்காமல் உள்ள நாட்டு வெடிகுண்டை, வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.