தமிழ்நாடு செய்திகள்

கொள்ளையர்களை திருவண்ணாமலை போலீசார் அழைத்து சென்ற காட்சி.

பண்ருட்டி வீட்டில் திருடிவிட்டு காரில் தப்பிய சென்னை வாலிபர்களை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்

Published On 2023-06-27 13:36 IST   |   Update On 2023-06-27 13:37:00 IST
  • கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
  • 50 பவுன் தங்க நகை மற்றும் கார் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை:

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர்கள் யுவராஜ் (வயது 32), பாலாஜி (24) இவர்கள், இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் ஒரு வீட்டில் கொள்ளையடித்தனர்.

மேலும் அவர்கள் வீட்டின் முன்பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் திருடிக்கொண்டு அதில் தப்பி சென்றனர். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனே கடலூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையிலான போலீசார், திருடர்களை பின்தொடர்ந்து காரில் விரட்டி வந்தனர்.

மேலும் முன்கூட்டியே திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பி ரண்டுகள் குணசேகரன் மற்றும் முருகன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி போலீசார் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அக்னி லிங்கம் அருகில் சாலை நடுவே தடுப்புகள் அமைத்து தயார் நிலையில் இருந்தனர்.

அந்த வழியாக கொள்ளையர்கள் வேகமாக வந்த காரை மடக்கி பிடித்தனர். சினிமா பாணியில் அவர்களை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 50 பவுன் தங்க நகை மற்றும் கார் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களோடு 2 பேரையும், கடலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சினிமா பாணியில் கொள்ளையர்களை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News