தமிழ்நாடு

மர்மமான முறையில் இறந்து கிடந்த புலியை படத்தில் காணலாம்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆண் புலி மர்மமான முறையில் உயிரிழப்பு- வனத்துறையினர் விசாரணை

Published On 2023-10-24 05:37 GMT   |   Update On 2023-10-24 05:37 GMT
  • உடல் நிலை பாதித்து இறந்ததா அல்லது வேட்டையாடப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • பிரேத பரிசோதனை முடிவில் புலி எப்படி இறந்தது என்பது குறித்த காரணங்கள் தெரியவரும் என அமராவதி வனச்சரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அமராவதி வனச்சரகம் கல்லாபுரம் சுற்று கழுதகட்டி ஓடை பகுதியில் இன்று காலை புலி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது அங்கு 9வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று இறந்து கிடந்தது. அதன் வாயில் காயங்கள் இருந்தது. அந்த புலி எப்படி இறந்தது என்று தெரியவில்லை. உடல் நிலை பாதித்து இறந்ததா அல்லது வேட்டையாடப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்காக வனத்துறையினர் உயிரிழந்த புலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவில் புலி எப்படி இறந்தது என்பது குறித்த காரணங்கள் தெரியவரும் என அமராவதி வனச்சரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 2 மாதத்தில் 11 புலிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் புலிகள் இறப்பு குறித்து தேசிய புலிகள் ஆணைய அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி சென்றனர். இந்தநிலையில் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் மற்றொரு புலி உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News