சமூக நீதி குறித்து பேசும் தி.மு.க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஏன் தயங்குகிறது?- அன்புமணி
- மதுவை பாக்கெட்டுகளில் விற்பனை செய்யும் தமிழக அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும்.
- அடுத்த தலைமுறை கஞ்சா என்னும் போதை பொருளால் பாதிப்பதை தடுக்க வேண்டும்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்திற்காக இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரிக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டம் உள்ளிட்ட நிலுவையில் உள்ள நீர்பாசன திட்டங்களை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தொடர் விபத்துக்கள் நடைபெற்று வரும் தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையை பகுதியை உடனடியாக சீர்படுத்த வேண்டும். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு அல்லது சேலம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அரசு மருத்துவமனையில் நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு மருத்துவர்கள் மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
மொரப்பூர்-தருமபுரி ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை அரசு விரைவு படுத்த வேண்டும். தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைவிடத்தில் தார்சாலை ஒன்று மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளது. எவ்வித தொழிற்சாலைகளும் இதுவரை வரவில்லை.
விவசாய விளை நிலங்களை அழித்து அங்கு தொழிற்சாலைகள் அமைத்து ஏற்படும் வளர்ச்சி தேவையில்லை. சென்னையை தவிர்த்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் தரிசு நிலங்களில் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும்.
மதுவை பாக்கெட்டுகளில் விற்பனை செய்யும் தமிழக அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும். இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மதுக்கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்தது. ஆனால் இதுவரையில் இதை செயல்படுத்தவில்லை.
பல்வேறு வடிவங்களில் கஞ்சா விற்பனை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலரும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அடுத்த தலைமுறை கஞ்சா என்னும் போதை பொருளால் பாதிப்பதை தடுக்க வேண்டும். இதற்காக காவல்துறையில் உள்ள மது ஒழிப்பு பிரிவிற்கு கூடுதலாக காவலர்களை நியமிக்க வேண்டும். பல்வேறு வடிவங்களில் கஞ்சா விற்பனை செய்வதை அரசு தீவிர நடவடிக்கை மூலம் தடுக்க வேண்டும். தமிழக அரசு துறைகளில் 5 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளது. இதை உடனடியாக அரசு நிரப்ப வேண்டும்.
பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 75 சதவீதமாக இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. ஆனால் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என தெரிவித்துள்ளது. தொடர்ந்து சமூக நீதி குறித்து பேசிவரும் தி.மு.க ஏன் சாதிவாரியை கணக்கெடுப்பு நடத்த தயங்குகிறது?
வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும். கூட்டணி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
ஆவின் பால் விற்பனை குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானது எனில் அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தனியார் பால் கொள்முதலில் தொடர்ந்து ஊழல் நடைபெற்று வருகிறது. இதை அரசு உடனடியாக தடுக்க வேண்டும்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு மத்திய அரசு நேரடியாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு வழங்கும் நிதியை போல தமிழகத்திற்கும் வழங்க வேண்டும். அப்போதுதான் பணிகள் விரைவில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.