தமிழ்நாடு செய்திகள்

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்- போக்குவரத்து நெரிசல்

Published On 2023-07-30 11:35 IST   |   Update On 2023-07-30 11:35:00 IST
  • வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் கொடைக்கானலின் எழிலை தங்கள் கேமராவில் புகைப்படமாக பதிவு செய்து மகிழ்ந்தனர்.
  • சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது இதமானசீதோசனத்தை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து கல்லூரி மாணவர்கள் அதிகளவில் வருகை தந்தனர்.

வனப்பகுதிகளில் உள்ள மோயர் சதுக்கம், குணாகுகை, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன்மரக்காடுகள், கோக்கர்ஸ் வாக் உள்பட பல்வேறு இடங்களில் மேக கூட்டங்களுக்கு இடையே இயற்கை எழிலை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் கொடைக்கானலின் எழிலை தங்கள் கேமராவில் புகைப்படமாக பதிவு செய்து மகிழ்ந்தனர்.

வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, கரடிச்சோலை அருவி ஆகிய அருவிகள் முன்பு இளைஞர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அவ்வப்போது பெய்த சாரல் மழை சுற்றுலா பயணிகளை உற்சாகமடைய செய்தது. நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரியும், குதிரை சவாரி மேலும் சிலர் நடைபயிற்சி செய்தும் மகிழ்ந்தனர். வாரவிடுமுறை, மொகரம் பண்டிகையையொட்டி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் பல்வேறு இடங்களில் கட்டண உயர்வு அதிகரிப்பின் காரணமாக தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வாடகை கார் ஓட்டுனர்கள் கவலை தெரிவித்தனர். பேரிஜம் பகுதியில் கார், வேன்களுக்கு கட்டண உயர்வு அறிவிப்பப்பட்டுள்ளதால் சுற்றுலாபயணிகள் சிலர் அந்த பகுதியை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும்இனி வரும் காலங்களில் சுற்றுலாபயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் கொடைக்கானல் செண்பகனூர் பெட்ரோல் மையம் முதல் ஏரிச்சாலை வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

Tags:    

Similar News