தமிழ்நாடு

கவர்னரை கண்டித்து 20-ந்தேதி நடைபெறும் தி.மு.க. உண்ணாவிரதத்தில் அமைச்சர்களும் பங்கேற்க முடிவு

Published On 2023-08-17 07:04 GMT   |   Update On 2023-08-17 07:55 GMT
  • மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து 20-ந்தேதி தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து உள்ளது.
  • தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணியினர் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் நடைபெற உள்ளது.

சென்னை:

நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிகளை தி.மு.க. அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் அதற்கு மத்திய அரசு இதுவரை சம்மதிக்கவில்லை.

இதற்கான கோப்பு ஜனாதிபதியிடம் உள்ளது. தமிழக அரசு பலமுறை வற்புறுத்தியும் மத்திய அரசு செவி சாய்க்காமல் உள்ளதாக தி.மு.க. குற்றம் சாட்டி வருகிறது.

அதுமட்டுமின்றி சமீபத்தில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி நீட் மசோதாவில் கையெழுத்து போடமாட்டேன் என்று கூறினார்.

நீட் தேர்வுக்கு தடை கோருவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட மாட்டேன்.

இந்த விவகாரம் பொதுப்பட்டியலில் இருப்பதால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை பொறுத்தவரை பயிற்சி மையங்களுக்கு சென்றுதான் அதில் வெற்றி பெற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை என்றும் கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பாக பேசி இருந்தார்.

இந்த நிலையில் மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து 20-ந்தேதி தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து உள்ளது.

தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணியினர் பங்கேற்கும் இந்த உண்ணாவிரத போராட்டம் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் நடைபெற உள்ளது.

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

இதேபோல் அந்தந்த மாவட்டங்களின் தலைநகரங்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டும் என்று தி.மு.க. தலைமை முடிவெடுத்து உள்ளது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News