தமிழ்நாடு

நெசப்பாக்கம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கட்டிடதூண் இடிந்ததால் மாணவர்கள் போராட்டம்

Published On 2023-08-21 08:13 GMT   |   Update On 2023-08-21 08:13 GMT
  • சேதமடைந்த இந்த பள்ளி கட்டிடத்தை பார்த்து மாணவர்கள் இன்று காலை அச்சமடைந்தனர்.
  • மாநகராட்சி பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

சென்னை:

சென்னை கே.கே.நகர் நெசப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில், சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 3 மாடிகளுடன் இந்த பள்ளி கட்டிடம் அமைந்து உள்ளது.இப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று பள்ளி கட்டிடத்தின் தூண் பல இடங்களில் உடைந்து விரிசல் ஏற்பட்டது.மேலும் சீலிங்' சிமென்ட் பகுதியும் பெயர்ந்தது. சேதமடைந்த இந்த பள்ளி கட்டிடத்தை பார்த்து மாணவர்கள் இன்று காலை அச்சமடைந்தனர்.

இந்த தகவல் அறிந்து பள்ளி முன் பெற்றோர்களும் குவிந்தனர். அதை தொடர்ந்து மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியின் முன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். உடனடியாக பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து மாணவ-மாணவிகள், பெற்றோர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பள்ளி கட்டிடம் விரைவில் சீரமைக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மாணவ- மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தையொட்டி மாநகராட்சி பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், 'பள்ளி கட்டடத்தின் நிலைபடுமோசமாக உள்ளது. பள்ளி கட்டிடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளதால், மழைக்காலத்தில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயமாக உள்ளது' தற்போது பள்ளி கட்டிட தூண்கள் இடிந்து விழுந்து உள்ளதால் மாணவ மாணவிகள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளியை சீரமைக்க வேண்டும்' என்றனர்.

Tags:    

Similar News