தமிழ்நாடு

வீடு புகுந்து செல்போனை திருடியபோது 3-வது மாடியில் இருந்து விழுந்து கொள்ளையன் பலி

Published On 2023-05-29 08:15 GMT   |   Update On 2023-05-29 08:15 GMT
  • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கொள்ளையன் மணிகண்டன் பரிதாபமாக இறந்தான். இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • திருட சென்ற இடத்தில் 3-வது மாடியில் இருந்து விழுந்து கொள்ளையன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை:

சைதாப்பேட்டை, சேஷாசலம் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று இரவு அவர் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினார். இந்த நிலையில் நள்ளிரவு மர்ம வாலிபர் ஒருவர் திடீரென மோகன்ராஜின் வீட்டுக்குள் புகுந்தான். அவன் அங்கிருந்த விலை உயர்ந்த செல்போனை திருடிவிட்டு வீட்டுக்குள் வேறு ஏதாவது பொருட்கள் உள்ளதா என்று நோட்டமிட்டான்.

அந்த நேரத்தில் சத்தம் கேட்டு மோகன் ராஜ் எழுந்தார்.வீட்டுக்குள் திருடன் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டபடி படி திருடனை பிடிக்க முயன்றார்.

இதையடுத்து உஷாரான கொள்னையன் திருடிய செல்போனை வீசி எறிந்து விட்டு அவரிடம் சிக்காமல் இருப்பதற்காக 3-வது மாடியில் இருந்து குதித்தான். அருகில் மரம் இருப்பது தெரியாமல் அவன் குதித்தால் அதில் சிக்கிக் கொண்டான். மேலும் 3-வது மாடியில் இருந்து விழுந்ததால் கொள்ளையன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினான்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சைதாப்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மரக்கிளையில் சிக்கி படுகாயம் அடைந்த திருடனை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விசாரணையில் அவன் சைதாப்பேட்டை, கோட்டமேடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது31) என்பது தெரிந்தது. அவன் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் மற்றும் கஞ்சாவிற்பனை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கொள்ளையன் மணிகண்டன் பரிதாபமாக இறந்தான். இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருட சென்ற இடத்தில் 3-வது மாடியில் இருந்து விழுந்து கொள்ளையன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News