தமிழ்நாடு

திருப்பூர் காப்பகத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

Published On 2022-10-07 10:45 GMT   |   Update On 2022-10-07 10:45 GMT
  • தி.மு.க. கட்சி சார்பில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1லட்சம் பணமும் சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதி உதவி.
  • உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே உள்ள விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் நேற்று உயிரிழந்தனர். மேலும் 11 சிறுவர்களுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அமைச்சர் மு.பி.சாமிநாதன் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவாசன், சமூக நலத்துறை இயக்குனர் வளர்மதி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் அதிகாரிகள் மாணவர்கள் தங்கி இருந்த காப்பகத்தில் ஆய்வு செய்தனர். இப்போது மாணவர்கள் தங்கி இருந்த அறை, சமையல் கூடம் மற்றும் உணவு அருந்தும் இடம், இடங்களை ஆய்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் தி.மு.க. கட்சி சார்பில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1லட்சம் பணமும் சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதி உதவியாக அமைச்சர்கள் வழங்கினார்கள்.

இந்நிலையில், காப்பகத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News