தமிழ்நாடு

பொதுத்துறை உர நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதா?- ராமதாஸ் எதிர்ப்பு

Published On 2022-08-13 06:41 GMT   |   Update On 2022-08-13 06:41 GMT
  • பொதுத்துறை உர நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, அவற்றை வாங்கும் பெரு நிறுவனங்களைத் தவிர வேறு யாருக்கும் பயனளிக்காது.
  • சென்னை உர நிறுவனம் உள்ளிட்ட 3 பொதுத்துறை உர நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மணலியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சென்னை உர நிறுவனம் உள்ளிட்ட 3 பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படவிருப்பதாகவும் தெரியவருகிறது. இந்தியாவின் வேளாண் வளர்ச்சிக்கு துணை புரியும் உர நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை ஏற்க முடியாது.

இந்தியாவில் அனைத்து வகையான உரங்களுக்கும் இப்போது மானியம் வழங்கப்பட்டு வருகிறது. உரங்கள் மீது விலைக் கட்டுப்பாடும் உள்ளது. காலப்போக்கில் மத்திய அரசின் மானியம் ரத்து செய்யப்பட்டால், உர நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்தால் மட்டும் தான் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரங்களை வழங்க முடியும்; தனியாரிடமிருந்தால் உரங்களின் விலை கடுமையாக உயர்த்தப்படும் என்பதால், தனியார்மயமாக்கல் உழவர்களை கடுமையாக பாதிக்கும். 3 பொதுத்துறை உர நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் உரிமைகளும் காலப்போக்கில் பறிக்கப்படக்கூடும்.

பொதுத்துறை உர நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, அவற்றை வாங்கும் பெரு நிறுவனங்களைத் தவிர வேறு யாருக்கும் பயனளிக்காது. இதைக் கருத்தில் கொண்டு சென்னை உர நிறுவனம் உள்ளிட்ட 3 பொதுத்துறை உர நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கை விட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News