தமிழ்நாடு செய்திகள்

ராஜபாளையத்தில் டி.வி.யை தலையில் போட்டு கட்டிட தொழிலாளி கொலை- வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2023-07-23 10:29 IST   |   Update On 2023-07-23 10:29:00 IST
  • மது குடிக்க பணம் கேட்ட பிரச்சினையில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜபாளையம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  • கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான கார்த்தீஸ்வரனை தேடி வருகின்றனர்.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பக தோப்பு ரோடு பகுதியில் உள்ள மருதுநகரை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 52), கட்டிட தொழிலாளி. இவருக்கு மது பழக்கம் இருந்தது.

ராயப்பனும், அதே பகுதியில் உள்ள இந்திரா நகரை சேர்ந்த கார்தீஸ்வரன் (40) என்பவரும் சேர்ந்து மது குடிப்பது வழக்கம். கார்த்தீஸ்வரன் அடிக்கடி ராயப்பனிடம் மது குடிக்க பணம் வாங்கி செல்வார்.

அதன்படி சம்பவத்தன்று காலை குறிஞ்சி நகர் விலக்கு டீக்கடை முன்பு ராயப்பன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்தீஸ்வரன் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுக்கவே 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த கார்த்தீஸ்வரன் அருகில் இருந்த பழைய இரும்பு பொருட்கள் கடையில் வைக்கப்பட்டிருந்த டி.வி.யை எடுத்து ராயப்பன் தலையில் போட்டார். இதில் டி.வி. கண்ணாடி உடைந்து அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ராயப்பன் சம்பவ இடத்திலேய பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உறவினர் சித்திரை முத்து ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான கார்த்தீஸ்வரனை தேடி வருகின்றனர்.

மது குடிக்க பணம் கேட்ட பிரச்சினையில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜபாளையம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News