தமிழ்நாடு

அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் நாற்காலிகளை வீசி மோதல்: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published On 2022-07-09 06:19 GMT   |   Update On 2022-07-09 06:19 GMT
  • ராமநாதபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் பால்பாண்டியன் போலீசில் புகார் செய்தார்.
  • ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான ஆர்.எஸ்.மடையைச் சேர்ந்த சுரேஷ் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன், நகர் செயலாளர் பால்பாண்டியன். மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார், கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், மருது பாண்டியன், ஜானகிராமன், கருப்பையா உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நடந்த இந்த கூட்டத்தின்போது ராமநாதபுரம் நகர முன்னாள் தலைவர் கவிதா சசிகுமார் பேசிக் கொண்டிருந்தபோது, சிலர் கும்பலாக கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தனர். அவர்கள் "ஓ.பன்னீர்செல்வம் வாழ்க" என்று கோஷமிட்டபடி நாற்காலிகளை எடுத்து மேடையை நோக்கி வீசினர்.

இதில் இடையர்வலசையைச் சேர்ந்த கிளை செயலாளர் மணிபாரதி (வயது 65), புத்தேந்தல் கிளை செயலாளர் சந்திரன் (50) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். மேலும் கூட்டம் நடைபெற்ற தனியார் மண்டபத்தின் முன்பு கிளைச் செயலாளர் சாதிக் பாட்சாவின் கார் கண்ணாடியை சிலர் அடித்து நொறுக்கினர்.

இதுபற்றி ராமநாதபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் பால்பாண்டியன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான ஆர்.எஸ்.மடையைச் சேர்ந்த சுரேஷ் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News