தமிழ்நாடு

ஆண்டிபட்டி அருகே திருட்டு காரை விற்று மோசடி செய்த வாலிபர்களுக்கு வலை

Published On 2023-09-01 05:24 GMT   |   Update On 2023-09-01 05:24 GMT
  • பணத்தை கொடுத்து விட்டு காரை எடுத்துச் செல்லுமாறு கூறினார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

ஆண்டிபட்டி:

தூத்துக்குடியை சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது37). இவர் அதே பகுதியில் 4 சக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த மாதம் இணையதளத்தில் கார் விற்பனைக்கு உள்ளது என விளம்பரம் செய்யப்பட்டது. அந்த விளம்பரத்தில் வந்த செல்போன் எண்ணுக்கு போன் செய்தபோது மதுரை மாவட்டம் கொடிக்குளத்தை சேர்ந்த அன்புச்செல்வன் என்பவர் பேசி உள்ளார். அவர் தான் புதிதாக வாங்கிய காரை குடும்ப சூழ்நிலைக்காக விற்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி அந்த காரை ரூ.9 லட்சத்து 10 ஆயிரத்துக்கு விலை பேசி உள்ளனர். பணத்தை கொடுத்து விட்டு ஆண்டிபட்டி அருகே ராஜதானி பகுதியில் காரை எடுத்துச் செல்லுமாறு அன்புச்செல்வன் கூறி உள்ளார். அதன்படி அங்கு வந்தபோது அன்புச்செல்வன் அங்கு இல்லை. தான் மருத்துவ பரிசோதனைக்காக வெளியூர் வந்து விட்டதாகவும் தனது நண்பர்கள் முருகன் மற்றும் ஆனந்த் ஆகியோரிடம் இது குறித்து கூறி உள்ளேன். அவர்களிடம் பணத்தை கொடுத்து விட்டு காரை எடுத்துச் செல்லுமாறு கூறினார்.

அதன்பேரில் மதன்ராஜ் பணத்தை கொடுத்து விட்டு காரை தனது ஊருக்கு எடுத்து சென்றார். பின்னர் அந்த காரை தஞ்சாவூரை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு ரூ.9 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்தார்.

சிறிது நாளில் இந்த கார் திருடப்பட்டது என கூறி கேரள போலீசார் அதனை பறிமுதல் செய்து சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் தான் கார் வாங்கிய மதன்ராஜிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

அதன்பிறகு அன்புச்செல்வன் மற்றும் அவரது கூட்டாளிகள் பேச மறுத்துவிட்டனர். இது குறித்து ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்தில் மதன்ராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

இந்த கும்பல் மீது மதுரை, சென்னை அண்ணாநகர், அமைந்தகரை, அடையாறு உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் இதேபோல திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News