பா.ஜ.க. தலைவர்கள் பாராட்டினால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...
- தென்மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கு... நிதி உடனடியாக கொடுங்கள் என்றேன்.
- ஒன்றிய அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை வைத்து பழிவாங்கிட்டு இருக்காங்க.
சென்னை :
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:-
கே: அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் விமர்சிக்கக்கூடிய இடத்தில் அமைச்சர் உதயநிதி இருக்கிறார்...
ப : அவங்க விமர்சனம் பண்றாங்கண்ணா நம்ம சரியான பாதையில் தான் செல்கிறோம்-ங்கறது என்னுடைய எண்ணம். பாராட்டுன்னா தான் ஜாக்கிரதையா இருக்கணும்.
கே: கடும் விமர்சனம், தேசிய அளவில் உதயநிதி பேசும் பொருளாக இருக்கிறார். இன்னொரு பக்கம் குறுகிய காலத்தில் 2 முறை பிரதமருடன் சந்திப்பு...
ப: பிப்ரவரியில் பிரதமரை சந்தித்த போது நீட் தேர்வு குறித்து பேசினேன். அவரும் சில விஷயங்களை சொன்னார். இந்த முறை கேலோ இந்தியா விளையாட்டின் முதலமைச்சர் அழைப்பிதழை கொடுக்க சென்றேன். தென்மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கு... நிதி உடனடியாக கொடுங்கள் என்றேன். அதற்கு முடிவெடுத்து சொல்றோம்ன்னு சொன்னாங்க.
கே : அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை சந்தித்து சிறையில் இருக்கிறார். பொன்முடிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வந்து இருக்கு... இது எல்லாம் தி.மு.க.வுக்கு பாராளுமன்ற தேர்தலில் ஒரு நெருக்கடியா மாறாதா?
ப: மக்களுக்கு தெரியும். இதெல்லாம் ஒன்றிய அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை வைத்து பழிவாங்கிட்டு இருக்காங்க. அதுக்கு பயந்துதான் அதிமுக அவங்களோட கூட்டணி வைத்து இருந்தார்கள். மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். சட்டபடி சந்தித்து வெளியே வருவோம்.