தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 78.51 அடியாக சரிவு- ஒரே மாதத்தில் 24.84 அடி குறைந்தது

Published On 2023-07-13 09:21 IST   |   Update On 2023-07-13 09:21:00 IST
  • அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
  • நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நங்கவள்ளி:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், ஒகேனக்கல், மேட்டூர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

நீர்வரத்து வினாடிக்கு குறைந்துள்ள நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 161 கன அடியாக இருந்தது. இன்று இது 107 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நேற்று 79.40 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 78.51அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 40.48 டி.எம்.சி.யாக உள்ளது. ஒரு மாதத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 24.84 அடி சரிந்துள்ளது.

வரும் காலங்களில் நெல் சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி இருப்பதால், பருவமழையை எதிர்பார்த்து டெல்டா விவசாயிகள் காத்திருக்கின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கேரளா, கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், கர்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் காரணமாக, மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 19 அடி உயர்ந்தது.

அதேபோன்று, நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது, நீர் வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News