சேலம் பெரியசோரகை பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து நாளை பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி
- திருச்சியில் நாளை அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் 40 பேரை ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி பிரசாரம் செய்கிறார்.
- திறந்த வேனில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
சேலம்:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம், தே.மு.தி.க. எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் அ.தி.மு.க. 33 இடங்களில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் தென்காசியிலும், எஸ்.டி.பி.ஐ. கட்சி திண்டுக்கல் தொகுதியிலும் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இதே போல் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். திருச்சியில் நாளை (24-ந்தேதி) அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் 40 பேரை ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி பிரசாரம் செய்கிறார்.
இதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார். பின்னர் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சேலம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள கரியவரதராஜ பெருமாள் கோவிலில் நாளை காலை 9 மணியளவில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அந்த பகுதியில் திறந்த வேனில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
ஒவ்வொரு தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் தான் தனது பிரசாரத்தை தொடங்குவார். அதே போல் இந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க உள்ளார். பின்னர் இங்கிருந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார்.
எடப்பாடி பழனிசாமி நாளை முதல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதால் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.