தமிழ்நாடு செய்திகள்

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் 24-ந்தேதி எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

Published On 2022-12-13 12:27 IST   |   Update On 2022-12-13 12:27:00 IST
  • எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அன்று அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்தும், உருவப் படங்களை வைத்து மாலை அணிவித்தும், மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும்.

சென்னை:

அ.தி.மு.க. தலைமை கழகம் என்ற பெயரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு அமரர் ஆகிய நாள் 24.12.1987. எம்.ஜி.ஆரின் 35-வது ஆண்டு நினைவு நாளான 24-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் அ.தி.முக. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.

தொடர்ந்து, தலைமைக் கழகச்செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ளனர்.

அதனையடுத்து, எம்.ஜி.ஆரின் நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியில் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும்

கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அன்று அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்தும், உருவப் படங்களை வைத்து மாலை அணிவித்தும், மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News