சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவு
- விபத்தில் காவலர் ராஜேஷ் உயிரிழந்துள்ளது காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
- காவலர் ராஜேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் காலராக பணிபுரிந்துவரும் ராஜேஷ் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி காவல் சரகம், சீர்காழி நத்தம் சாலையின் தடுப்பில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் காவலர் ராஜேஷ் உயிரிழந்துள்ளது காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
காவலர் ராஜேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.