தமிழ்நாடு

சென்னை குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 60 சதவீதத்துக்கு கீழ் குறைந்தது

Published On 2023-05-31 10:06 GMT   |   Update On 2023-05-31 10:06 GMT
  • கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
  • செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

திருவள்ளூர்:

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது கோடை காலம் என்பதால் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் தண்ணீர் தேவை அதிகரித்து வருவதால் குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 60 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து விட்டது. 6908 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 58 சதவீதம் ஆகும்.

குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வந்தாலும் தற்போது கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திரமாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.

மேலும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. இதில் 1135 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நீர் 135 கனஅடி வந்து கொண்டு இருக்கிறது.

சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 708 மி.கனஅடியும், புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கன அடியில் 2251 மி.கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 2354 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளவான 500 மி.கனஅடியில் 460 மி.கன அடி தண்ணீர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News