2-ம் வகுப்பு மாணவிக்கு மிட்டாய் கொடுத்து சில்மிஷம்: கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
- மாணவியின் பெற்றோர் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த உக்கரம், குப்பன் துறை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (33). கூலி தொழிலாளி.
கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் குப்பன் துறை பகுதியில் ஒரு வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்த 2-ம் வகுப்பு மாணவியிடம் செந்தில்குமார் நைசாக பேச்சு கொடுத்து அந்த மாணவிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இது குறித்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி இன்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட செந்தில்குமாருக்கு 20 வருட சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியிருந்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நிவாரண தொகையாக வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தார். மேலும் இந்த இழப்பீட்டு தொகையை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறியிருந்தார்.