தமிழ்நாடு

சேலம் திமுக வேட்பாளர் செல்வ கணபதியின் வேட்பு மனு நிறுத்தி வைப்பு

Published On 2024-03-28 06:44 GMT   |   Update On 2024-03-28 06:44 GMT
  • 40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.
  • வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் மனோ ஆகியோரின் வேட்புமனுக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சேலம்:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கியது. 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில் மொத்தம் 1403 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்திருப்பதால் மொத்த வேட்புமனு எண்ணிக்கை 1749 ஆக உள்ளது.

40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வேட்பு மனுவை பரிசீலனை செய்து வரும் தேர்தல் அதிகாரி சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

2 இடங்களில் வாக்கு இருப்பதாக அதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என கூறி வேட்பு மனு மீதான பரிசீலனையை தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்துள்ளார்.

அதேபோல் வடசென்னை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் மனோ ஆகியோரின் வேட்புமனுக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பரஸ்பரம் ஆட்சேபணை தெரிவித்த நிலையில் 2 பேரின் வேட்பு மனு மீதான பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News