தமிழ்நாடு

கறிக்கடை வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு- போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை

Published On 2023-03-27 06:23 GMT   |   Update On 2023-03-27 06:23 GMT
  • தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பெட்ரோல் வெடிகுண்டு மாதிரிகளை சேகரித்தனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரைச் சேர்ந்தவர் ராஜா முகமது. இவர் அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு ராஜா முகமது வழக்கம் போல் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார்.

நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் ராஜா முகமது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் பெட்ரோல் குண்டு வெடித்ததில் வீட்டின் வெளியே இருந்த திரைச்சீலை எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜா முகமது உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மேலூர் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி, மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பெட்ரோல் வெடிகுண்டு மாதிரிகளை சேகரித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று மாலை ராஜா முகமது, தனது மனைவி ரம்ஜானுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ராஜா முகமது ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி கீழே விழுந்தனர். இது தொடர்பாக ராஜா முகமது, விபத்தை ஏற்படுத்திய நபர்களிடம் தட்டிக்கேட்ட போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே அந்த நபர்கள் தான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News