தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம்

Published On 2026-03-01 10:31 IST   |   Update On 2026-03-01 10:31:00 IST
  • மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
  • மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும்.

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று தாய் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

பிறந்தநாளையொட்டி மு.க.ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "திராவிட மாடலின் நாயகர்களான தந்தை பெரியார் விதைத்த சமூகநீதி சிந்தனையையும், பேரறிஞர் அண்ணா வடிவமைத்த அரசியல் மரபையும், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய திராவிடச் சித்தாந்தத்தையும் செயல்முறை ஆட்சியாக மாற்றி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேர்களை மேலும் வலுப்படுத்தி, மனிதநேய அரசியலை வழிகாட்டியாகக் கொண்டு மக்கள் நம்பிக்கையை வென்று வரும் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல் தேக ஆரோக்கியத்துடன், தளராத மனவலிமையுடனும் தொடர்ந்து மக்கள் சேவையில் முழுமையாக ஈடுபட்டு, தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல எல்லாம் வல்ல இறைவன் அருள் எப்போதும் துணையாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவை பெருவெள்ளமாக திரட்டி, மாபெரும் வெற்றி பெற்று, மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சமத்துவம், வளர்ச்சி, மனிதநேயம் ஆகிய அடிப்படைகளில் மக்கள் நல ஆட்சியை மேலும் வலுப்படுத்தும் கழகத் தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News