தமிழ்நாடு

மீன்சந்தை அருகே வட மாநில வாலிபர் அடித்து கொலை: போலீசார் விசாரணை

Published On 2024-03-17 05:19 GMT   |   Update On 2024-03-17 05:19 GMT
  • ஸ்டோனி பாலம் அருகே உள்ள ஓடை பகுதியில் இரவு நேரங்களில் வெளி நபர்கள் அதிக அளவில் வந்து மது அருந்து செல்கின்றனர்.
  • சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஒரு சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. மீன் மார்க்கெட் அருகே ஓடை செல்கிறது.

அதன் அருகே இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் ரத்த கரையில் நிர்வாணமாக இறந்து கிடந்தார். இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் டி.எஸ்.பி. ஜெய்சிங், சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் வைரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு ஓடை பகுதியில் ஒரு சிலர் மது அருந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வட மாநில வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இறந்த நபரின் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் இருந்தது. இதேபோல் இடது கை மற்றும் இடது கண்ணிலும் ரத்த காயங்கள் இருந்தன.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது:- ஸ்டோனி பாலம் அருகே உள்ள ஓடை பகுதியில் இரவு நேரங்களில் வெளி நபர்கள் அதிக அளவில் வந்து மது அருந்து செல்கின்றனர்.

இதில் மது அருந்தும் போது அவர்களுக்குள் சில நேரங்களில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர். எனவே போலீசார் இரவு நேரங்களில் இந்த பகுதியில் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்றனர்.

இந்நிலையில் இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஒரு சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News