சென்னை உள்நாட்டு முனையத்தில் விமானங்களில் மாறி செல்லும் பயணிகளுக்கு புதிய வசதி
- உள்நாட்டு விமான பயணிகளில், விமானங்கள் மாறி செல்லும் டிரான்சிட் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.
- பயணிகள் மிகவும் குறுகிய நேரத்தில், ஒரு உள்நாட்டு விமானத்தில் வந்து விட்டு, மற்றொரு உள்நாட்டு விமானத்தில், புறப்பட்டு சென்று, பயணம் செய்ய முடியும்.
ஆலந்தூர்:
சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் ஒரு விமானத்தில் வந்துவிட்டு, உடனடியாக மற்றொரு உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்வதை "டிரான்சிட்" பயணம் என்று சொல்லப்படுகிறது. இந்த பயணத்தில் வரும் பயணிகள் இதுவரை வருகை பகுதி வழியாக வெளியில் வந்து, பின்னர் புறப்பாடு பகுதிக்கு சென்று தான், பயணிக்க வேண்டும். மிக முக்கிய வி.வி.ஐ.பி. பயணிகள் தவிர, மற்றஅனைவருக்கும் இந்த விதிமுறைதான் இருந்தது.
இதனால் உள்நாட்டு விமான பயணிகளில், விமானங்கள் மாறி செல்லும் டிரான்சிட் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. இதன்காரணமாக பல்வேறு நேரங்களில், தங்கள் பயணம் செய்ய வேண்டிய விமானங்களை தவறவிடும் சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து டிரான்சிட் பயணிகள் வெளியில் செல்லாமல், உள்ளிருந்தே புறப்பாடு பகுதிக்கு செல்வதற்கு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தற்போது சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் டிரான்சிட் பயணிகள், வெளியே செல்லாமல், வருகை பகுதியில் இருந்து, நேரடியாக புறப்பாடு பகுதியின், பாதுகாப்பு சோதனை பகுதிக்கு செல்வதற்காக, புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான புதிய பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், இந்த புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், டெல்லி விமானத்தில் வரும் ஒரு பயணி, தூத்துக்குடி விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றால், வெளியில் செல்லாமல், உள்ளிருந்தே டிரான்சிட் பயணிகள் செல்வதற்கான வழியாக சென்று, தூத்துக்குடி விமானத்தில் பயணிக்க முடியும். இதுபோல் அனைத்து உள்நாட்டு விமானங்களில் வரும் டிரான்சிட் பயணிகள், வெளியே செல்லாமல் உள்ளிருந்தே புறப்பாடு விமானத்தில் பயணம் செய்ய முடியும். இதனால் பயணிகள் மிகவும் குறுகிய நேரத்தில், ஒரு உள்நாட்டு விமானத்தில் வந்து விட்டு, மற்றொரு உள்நாட்டு விமானத்தில், புறப்பட்டு சென்று, பயணம் செய்ய முடியும்.