தமிழ்நாடு

சனாதன போர்வைக்குள் சன்மார்க்க நெறியை புகுத்த பார்ப்பதா?- அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

Published On 2023-06-23 03:07 GMT   |   Update On 2023-06-23 03:07 GMT
  • அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சிலர் சனாதனத்தை எதிர்க்கிறார்கள்.
  • தமிழ் பண்பாடும், விழுமியங்களும் தனித்து இயங்கும் தன் இயல்பினை கொண்டவை.

சென்னை:

கடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

அப்போது அவர், '10 ஆயிரம் ஆண்டு சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான், வள்ளலாரின் நூல்களை படித்து பிரமித்தேன். நமது பாரதம் சனாதன தர்மத்தால் ஆனது.

அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சிலர் சனாதனத்தை எதிர்க்கிறார்கள். சனாதன தர்மத்தை ஏற்றாலும், எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள்ளேயே இருப்பார்கள். உங்களில் என்னையும், என்னில் உங்களையும் காண்பதுதான் சனாதன தர்மம். யார் வேண்டுமானாலும் எந்த மார்க்கத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்ற நிலை இருந்தது. அதைத்தான் சனாதன தர்மம் போதிக்கிறது. இந்தியர்களை பற்றி தவறாக எழுதி வைத்திருப்பவர் காரல் மார்க்ஸ்'', என விமர்சித்திருந்தார்.

கவர்னரின் இந்த கருத்துக்கு, தமிழக நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்துக்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமான் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில், தா்ம ரட்சராக புதிய அவதாரம் மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி ஈடுபட்டிருக்கிறார்.

தமிழ் பண்பாடும், விழுமியங்களும் தனித்து இயங்கும் தன் இயல்பினை கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ் சமூக நாகரிக சுவடுகள் நமக்கு வெள்ளிடை மலையாக உணர்த்தி இருக்கின்றன.

மத்திய அரசின் தனிப்பெருங்கருணை, ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே கவர்னர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் கவர்னர் ஆர்.என்.ரவியின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News