நீர்மட்டம் குறைந்ததால் குட்டை போல் மாறிய மேட்டூர் அணை.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 421 கனஅடியாக அதிகரிப்பு
- கடந்த ஒரு வாரமாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிற
- மேட்டூர் அணை பகுதியில் நேற்று 47.80 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 3 மாதத்திற்கும் மேலாக காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது.
இதையடுத்து குறுவை பயிர்களை காப்பாற்ற கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக்கோரி தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தது.
இதையடுத்து முதல் கட்டமாக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து 2-வது கட்டமாகவும் 15 நாட்களுக்கு 5ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.
ஆனால் கர்நாடக அரசு அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
இதற்கிடையே கடந்த ஒரு வாரமாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 18-ந் தேதி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 556 கனஅடி நீர் வந்தது. 19-ந் தேதி 2ஆயிரத்து 844 கனஅடி தண்ணீர் வந்தது. 20-ந் தேதி நீர்வரத்து 2ஆயிரத்து 938 கனஅடியாக அதிகரித்தது. நேற்று 3ஆயிரத்து 367 கனஅடியாக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4ஆயிரத்து 421 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையின் நீர்மட்டம் 38.19 அடியாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 6ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் 11.17 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது. மேட்டூர் அணை பகுதியில் நேற்று 47.80 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.