தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் 3 முக்கிய இடங்களில் மெட்ரோ ரெயில் வசதி தகவல் பலகை- பஸ், ரெயில் பயணிகளுக்கு உதவ ஏற்பாடு

Published On 2023-08-31 15:54 IST   |   Update On 2023-08-31 15:54:00 IST
  • தினமும் 2.5 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர்.
  • சில முக்கிய இடங்களுக்கான கட்டணங்கள், ரெயில் சேவையின் நேரம், வழித்தடங்கள் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படும்.

சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தற்போது அவசியமாகிவிட்டது. தினமும் 2.5 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். சென்னையில் வசிப்பவர்கள் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து வருபவர்களும் அதனை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

ரெயில்கள், பஸ்கள் மூலம் சென்னைக்கு வருவதற்கு அருகில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்திற்கான வழிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றில் விரைவில் தகவல் பலகைகளை வைக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- பஸ், ரெயில் மூலம் தினமும் லட்சக்கணக்கான மக்கள் சென்னைக்கு வந்து செல்கிறார்கள். அவர்களில் பலருக்கு மெட்ரோ ரெயில் நிலையத்தின் அருகில் உள்ள இடம் தெரியாது. எனவே இந்த இடங்களில் தகவல் பலகை பொறுத்தப்படும்.

இந்த பலகையானது பயணிகளுக்கு அருகில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்லும் வழிகளை மட்டும் காட்டாமல் நகரத்தில் உள்ள சில முக்கிய இடங்களுக்கான கட்டணங்கள், ரெயில் சேவையின் நேரம், வழித்தடங்கள் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படும்.

அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை மெட்ரோ ரெயில் சேவை குறித்து அறிந்து அதற்கேற்றவாறு பயணத்தை திட்டமிட இது உதவியாக இருக்கும். பயணிகள் பஸ், ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு மெட்ரோ ரெயில் சேவை, அருகில் உள்ள இடங்கள் குறித்து கொள்ள இது உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News