தமிழ்நாடு செய்திகள்

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

Published On 2022-10-12 11:04 IST   |   Update On 2022-10-12 11:04:00 IST
  • பெரியார் நகரில் உள்ள பாண்டித்துரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
  • அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் நடந்து வரும் சோதனை அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. அரசு ஒப்பந்ததாரரான இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் ரிப்லெக்ட் விளக்குகள், செடிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஒப்பந்தம் எடுத்தார். இதில் பல கோடி முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று திருச்சி மற்றும் மதுரையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பெரியார் நகரில் உள்ள பாண்டித்துரை வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 8 மணி முதல் சோதனை நடந்து வருகிறது. இங்கு பாண்டிதுரையின் வீடு மற்றும் அலுவலகம் ஒரே வளாகத்தில் உள்ளது. இதில் தனித்தனி குழுக்களாக சென்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் கைப்பற்றப்படும் ஆவணங்களின் அடிப்படையில் பாண்டித்துரையின் முறைகேடுகள் பற்றிய முழு விவரம் வெளிவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் நடந்து வரும் இந்த சோதனை அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News