சுதந்திர தின விழா- சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
- விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கிய ரெயில், பஸ் நிலையங்கள் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
- விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பும், பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஆலந்தூர்:
இந்தியாவின் 75-வது சுதந்திரதின விழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டிஉள்ளதாக, மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க உத்தரவிட்டு இருக்கிறது.
அதன்படி விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கிய ரெயில், பஸ் நிலையங்கள் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்திலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு நேற்று இரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை மோப்ப நாய் உதவியுடன் சோதனை, விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் பார்வையாளா்கள் வருகைக்கான தடை ஏற்கனவே அமலில் இருப்பதால், அதை மேலும் தீவிரமாக செயல்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதைப்போல் பி.சி.ஏ.எஸ்.பாஸ்கள் வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பும், பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இதைப்போல் விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து, பார்சல்கள் அனைத்தையும் பல கட்ட சோதனைக்குப்பின்பே விமானங்களில் ஏற்ற அனுமதித்து வருகின்றனர்.
மேலும் விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால், உள்நாட்டு பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சா்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வருவதற்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள், பயணிகளை அறிவுறுத்தி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கூடுதல் பாதுகாப்பு வருகிற 20-ந்தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்றும், தற்போதைய 5 அடுக்கு பாதுகாப்பு வருகிற 13, 14, 15-ந்தேதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் என்றும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ரெயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ஆகஸ்ட் மாதம் ரெயில் பயணிகள் பாதுகாப்பு மாதமாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சார்பில் கடைபிடிக்கப்படுகிறது. பரங்கிமலை, மீனம்பாக்கம், பழவந்தாங்கல், திரிசூலம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பரங்கிமலை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் ரெயில்வே போலீசார் தேசிய கொடியின்பெருமை, ரெயில் பயணிகளின் பாதுகாப்பு உறுதி குறித்து மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.