தொடர் மழை எதிரொலி- கொசஸ்தலை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 170 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
- ஆந்திராவின் 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது.
வங்க கடலில் உருவான மாண்டஸ்' புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்து வரும் நிலையில், ஆந்திராவிலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதையடுத்து ஆந்திராவின் தென் கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டனர்.
6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன. 5 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் மற்றும் 5 மாநில பேரிடர் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவசர காலங்களில் மக்களை வெளியேற்றவும் தயாராக இருப்பதாகவும் மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனர் அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 170 கன அடி உபரி நீர் திறக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.