தமிழ்நாடு
சட்டசபை உரையில் 'திராவிட மாடல்' என்ற வார்த்தையை தவிர்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி
- 2 மற்றும் 3ம் பக்கத்தில் இருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையை பேசாமல் தவிர்த்தார்.
- ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் தனது உரையின்போது திராவிட மாடல் ஆட்சி என்ற வாக்கியத்தை தவிர்த்தார். ஆளுநர் உரையில் 'வளர்ச்சியுடன் கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்' என்ற வாக்கியம் இடம்பெறிருந்த நிலையில், உரையாற்றும்போது அதனை பேசாமல் தவிர்த்துள்ளார். 2 மற்றும் 3 பக்கத்தில் இருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையையும் பேசாமல் தவிர்த்தார்.
இதேபோல் 46ம் பக்கத்தில் இருந்த 'சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது' என்ற வார்த்தையையும் ஆளுநர் தவிர்த்துள்ளார். இது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டசபையில் இன்று ஆளுநர் உரையாற்ற தொடங்கியதும் திமுக கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள், ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.