திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருந்து தரிசனம்
- வார விடுமுறை மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
- ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் வழக்கத்தை விட அதிகமாக கூட்டம் காணப்படுகிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது.
இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். குறிப்பாக தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகமாக வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
வார விடுமுறை மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் வழக்கத்தை விட அதிகமாக கூட்டம் காணப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.