விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் - விபத்தில் பலியான சுகுமார், சரண்ராஜ்
பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி விபத்து- தனியார் நிறுவன ஊழியர்கள் பலி
- கும்பகோணத்தில் இருந்து பண்ருட்டி வழியாக வேலூர் சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- பஸ் மோதி 2 பேர் பலியான சம்பவம் செம்மேடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த செம்மேடு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா. இவரது மகன் சுகுமார் (25), அதே ஊரை சேர்ந்த ஐயப்பன் மகன் சரண்ராஜ் (24). இவர்கள் இருவரும் சோலார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தனர்.
இவர்கள் வேலை முடிந்து நள்ளிரவு 12.45 மணி அளவில் சின்ன சேமக்கோட்டை அய்யனார் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது கும்பகோணத்தில் இருந்து பண்ருட்டி வழியாக வேலூர் சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பஸ் சக்கரத்தில் சிக்கி சுகுமார், சரண்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ் மோதி 2 பேர் பலியான சம்பவம் செம்மேடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.