தமிழ்நாடு

கைதானவர்களை காணலாம்

வழிப்பறி பணத்தில் அழகிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கொள்ளை கும்பல்

Published On 2022-11-18 10:22 GMT   |   Update On 2022-11-18 10:22 GMT
  • மேலும் கைதான 6 பேரும் கொள்ளையடித்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
  • 6 பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்(வயது 23). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 13-ந்தேதி வேலை முடிந்ததும் அவரது நண்பரான முருகேசன் என்பவருடன் சுக்கம்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

பல்லடம் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா அருகில் செல்லும்போது அவர்களுக்கு பின்னால் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர், 2 பேரையும் வழிமறித்து தாக்கியதுடன் சசிகுமாரிடமிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் சசிகுமார் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் பல்லடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜவேல், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் பல்லடம்- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை கைது செய்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் சுக்கம்பாளையம் பகுதியில் சசிகுமாரிடம் செல்போனை பறித்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த காசிராமன்(23), அதே பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து(24), இசக்கி பாண்டி(32), செய்துங்கநல்லூரை சேர்ந்த மணிகண்டன்(27), அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(23), பல்லடத்தை சேர்ந்த ராஜேஷ் குமார்(25) என்பது தெரியவந்தது. 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 6 பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை ,கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.

மேலும் கைதான 6 பேரும் கொள்ளையடித்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் உள்ள விடுதிகளுக்கு அழகிகளை அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News