தமிழ்நாடு

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற மீனவர்கள்.

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் பேரணி

Published On 2024-02-20 08:13 GMT   |   Update On 2024-02-20 08:13 GMT
  • ராமேசுவரத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர்.
  • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் தலைமையில் ஏராளமான போலீசார் அந்தப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 4-ந்தேதி ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது ராமேசுவரத்தை சேர்ந்த 23 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரத்தில் 20 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதில் 2 படகு ஓட்டுநர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும், 2-வது முறையாக கைது செய்யப்பட்ட மீனவர் ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் இலங்கை நீதிமன்றம் வழங்கியது. இதனை கண்டித்து இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்திலும் படகுகளில் கறுப்பு கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி கச்சத்தீவு, புனித அந்தோணியார் ஆலய திருவிழா புறக்கணிப்பு போராட்டத்திலும் இன்று (செவ்வாய்க்கிழமை) ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்திருந்தனர்.

இதையொட்டி இன்று காலை ஏராளமான மீனவர்களும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்களும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ராமேசுவரத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர். மத்திய-மாநில அரசுகள் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் தலைமையில் ஏராளமான போலீசார் அந்தப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துணை சூப்பிரண்டு உமாதேவி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மீனவர்களின் பேரணி காரணமாக ராமேசுவரம், ராமநாதபுரம் பகுதிகளில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

Tags:    

Similar News