தமிழ்நாடு

எட்டப்பன் வேலை செய்பவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு பாடமாக அமைய வேண்டும்- எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

Published On 2023-01-27 08:01 GMT   |   Update On 2023-01-27 08:01 GMT
  • 2 ஆண்டு ஆட்சி காலத்தில் கிழக்கு தொகுதிக்கு ஒரு துரும்பை கூட தி.மு.க. கிள்ளி போடவில்லை.
  • அ.தி.மு.க. செயல்படுத்திய தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை திட்டங்களை கூட தி.மு.க.வினர் நிறுத்தி விட்டனர்.

ஈரோடு:

ஈரோட்டில் இன்று கிழக்கு தொகுதி அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும். மக்கள் பாராட்டுகிற அளவுக்கு தொகுதி பொறுப்பாளர்கள் பணி செய்ய வேண்டும். இரு பெரும் அரசியல் தலைவர்கள் கற்றுக்கொடுத்த அரசியலை இந்த தொகுதியில் பயன்படுத்தி மிகப்பெரிய சரித்திர வெற்றியை பெற வேண்டும்.

கட்சிக்காரர்கள் எங்கு இருந்தாலும் அவர்களது உணர்வுகள் கிழக்கு தொகுதி நோக்கி இருக்கும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஆட்சி எப்போது விலகும் என மக்கள் எதிர்பார்ப்பதாக தி.மு.க.காரர்களே கருதுகின்றனர்.

2 ஆண்டு ஆட்சி காலத்தில் கிழக்கு தொகுதிக்கு ஒரு துரும்பை கூட தி.மு.க. கிள்ளி போடவில்லை. தி.மு.க.காரர்கள் கூனி குறுகிதான் வாக்கு சேகரிக்க முடியும். அ.தி.மு.க.காரர்கள் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு சேகரிக்கலாம்.

5-ல் ஒரு பகுதி ஆட்சி முடிந்த பிறகும் முக்கிய திட்டங்கள் எதையும் தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. அ.தி.மு.க. செயல்படுத்திய தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை திட்டங்களை கூட தி.மு.க.வினர் நிறுத்தி விட்டனர்.

ஈரோடு மாநகராட்சி மக்களுக்கு 485 கோடியில் செயல்படுத்தப்பட்ட ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டத்தை அ.தி.மு.க. கொண்டு வந்த ஒரே காரணத்துக்காக தி.மு.க. நிறுத்துகிறது. மருத்துவ கல்லூரியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. இதனால் 564 பேர் மருத்துவ கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்களின் மருத்துவ படிப்பு செலவுகளையும் அ.தி.மு.க. ஏற்றது.

தி.மு.க. ஆட்சியில் வெல்லத்தை உள்ளூரில் கொள்முதல் செய்தால் கமிஷன் பெற முடியாது என்பதால் வெளி மாநிலத்தில் இருந்து வெல்லத்தை பெற்று பயன்படுத்த முடியாத வெல்லத்தை வழங்கினார்கள். திராவிட மாடல் என்பது அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவதுதான்.

3 நாட்களுக்குள் வாக்காளர்கள் விவரங்களை தொகுதி பொறுப்பாளர்கள் சரிபார்க்க வேண்டும். நமக்கு சோதனை புதிதல்ல. பல சோதனைகளை வென்ற இயக்கம். சிலர் எட்டப்பன்களாக மாறி எட்டப்பன் வேலை செய்து இந்த இயக்கத்தை முடக்க வேண்டும் என்று எதிரிகளோடு பணி செய்து வருகின்றனர். இந்த தேர்தல் அவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

சிலர் எப்படியாவது அ.தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க.வை தோற்கடித்த வரலாறு இல்லை. நாம் சரியான முறையில் உழைத்தால் வெற்றி நிச்சயம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News