தமிழ்நாடு

பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்தாதீர்கள் - சென்னை உயர் நீதிமன்றம்

Published On 2024-03-19 14:55 GMT   |   Update On 2024-03-19 14:55 GMT
  • பைக் சாகசங்களால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து இளைஞர்களுக்கு புரிய வைக்க வேண்டும்
  • பைக் சாகசங்களை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது

பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கிரிமினல்களாக முத்திரை குத்தாமல், அவர்களை சீர் திருத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆலோசனை கூறியுள்ளார்.

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி முகமது ஆசிக், சாதிக் ஆகிய இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையில் முக்கிய சாலைகளில் பைக் சாகசங்களை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகளையும், பள்ளி - கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, "பொறுப்பற்ற முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டும் இளைஞர்களை கிரிமினல்களாக முத்திரை குத்துவதை விடுத்து, பைக் சாகசங்களால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகளை கையாளுவதற்கு தேவையான நடைமுறையை உருவாக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுரை வழங்கியுள்ளார். இதனையடுத்து இவ்வழக்கின் விசாரணையை ஏப்ரல் 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags:    

Similar News