தமிழ்நாடு

பெண்ணுக்கு பாலியல் தொல்லை- கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

Published On 2023-08-07 04:16 GMT   |   Update On 2023-08-07 04:16 GMT
  • வீட்டு வாசலில் நின்றிருந்த பெண் சான்றிதழ்கள் எடுத்துவர உள்ளே சென்றுள்ளார்.
  • விசாரணையில் பெண்ணை கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டார்.

கோபி:

ஈரோடு மாவட்டம் பொலவபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55). இவர் கடம்பூர் மலைப்பகுதி குன்றில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். கோபி அருகே உள்ள நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் 23 வயது பெண். இவர் திருமணமாகி கணவர், குழந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் முருகேசனை அந்த பெண் சந்தித்து தனக்கு வேலை வழங்குமாறும், இதற்காக உங்கள் வீட்டுக்கு வந்து நான் படித்த சான்றிதழ்களை தருகிறேன் என்றும் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால் கிராம நிர்வாக அலுவலர் நீங்கள் என்னுடைய வீட்டுக்கு வர வேண்டாம். நானே உங்கள் வீட்டுக்கு வந்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டு்க்கு சென்று சான்றிதழ்கள் கேட்டுள்ளார்.

வீட்டு வாசலில் நின்றிருந்த அந்த பெண் சான்றிதழ்கள் எடுத்துவர உள்ளே சென்றுள்ளார். அப்போது அவரை முருகேசன் பின்தொடர்ந்து சென்றுள்ளார். சற்றும் எதிர்பாராத வகையில் அவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். இதை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்துள்ளனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் கிராம நிர்வாக அலுவலர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இது குறித்து அந்த பெண் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பெண்ணை கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி கிராம நிர்வாக அலுவலரை முருகேசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News