பாட்டுப்பாடி போக்குவரத்து விழிப்புணர்வை ஊட்டும் அரசு பள்ளி சிறுமி- டி.ஜி.பி. சைலேந்திர பாபு வியப்பு
- அரசு பள்ளி சிறுமி ஒருவர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் ஏற்படும் ஆபத்தை பற்றி பாட்டாக பாடி எல்லோரது கவனத்தையும் ஈர்க்கிறார்.
- பாடலை கேட்ட போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு இந்த குழந்தையைபோல் யாரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்று வெகுவாக பாராட்டி உள்ளார்.
சென்னை:
அரசு பள்ளி சிறுமி ஒருவர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் ஏற்படும் ஆபத்தை பற்றி பாட்டாக பாடி எல்லோரது கவனத்தையும் ஈர்க்கிறார். அவர் பாடிய பாடல் வருமாறு:-
பைக்கில ஏறி நீ பண்ணுற ஜாலி
நீ தவறி விழுந்துட்டா ஆளே காலி
பத்திரமா போவனும்டா நீயும் வீட்டுக்கு
பாதை மாறி நீயும் போயிடாத சுடுகாட்டுக்கு
ரோட்டுலத்தான் சின்ன பசங்க குறுக்க போகும்டா
பைக்க ஓட்டுற நீ தான் நாலு பக்கமும் பாத்து போகனும்டா
எட்டு வயசு பையன்கூட பைக்கை ஓட்டுறான்
அவனை பெத்தவனும் ஓட்டுறத பார்த்து ரசிக்கிறான்
பைக்கை ஓட்டத்தான் பையன் அடம்புடிக்கிறான்
பாதி வயசுலையே சுடுகாட்டுல இடம்புடிக்கிறான்
ஓரம் ஒதுங்கி வழிய விடனும் 108க்கு
தலையில ஹெல்மெட்டை நீ போடனும் உன் பாதுகாப்புக்கு
போக்குவரத்து விதிகளைதான் மதிச்சு போகனும்
ரோட்டுல ட்ராவல் செய்யும் போலீசுக்கும் உதவி செய்யணும்
போன உசுருதான் மீண்டும் திரும்ப வராது
ஒருத்தன அநியாயமா கொன்ன பாவம் உன்ன விடாது
பச்சை, மஞ்ச, சிவப்பு விளக்கு மேல எரியுது
நீ நின்னு போக வெள்ளகோடு கீழே தெரியுது
சாலை விதிய மீறி நாம போகக்கூடாது
தண்ணிய அடிச்சுட்டுத் தான் வண்டிய நீ ஓட்டக்கூடாது
செஞ்சத் தப்புத்தான் நான் குத்திக்காட்டல
ரோட்டுல பாத்தததான் பாடுறன்ப்பா இந்த பாட்டுல
சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த பாடல் எல்லோரையும் கவர்ந்துள்ளது.
இந்த பாடலை கேட்ட போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு இந்த குழந்தையைபோல் யாரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்று வெகுவாக பாராட்டி உள்ளார்.