தமிழ்நாடு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான விசாரணைக்கு அண்ணாமலை தடையா?: காங்கிரஸ் எம்.பி. சந்தேகம்

Published On 2023-11-23 06:06 GMT   |   Update On 2023-11-23 06:06 GMT
  • கரூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான கோப்பில் இன்று வரை கவர்னர் கையெழுத்திடாததன் மர்மம் என்ன?
  • சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த பிறகு தற்போது 15.5.2023 அன்று கோப்பு வந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது விசாரணைக்கு அனுமதி கேட்டு தமிழக அரசு கவர்னருக்கு கோப்பு அனுப்பியிருந்தது.

6 மாதமாக ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்குக்கு கவர்னர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் சி.விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது விசாரணைக்கு ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான கோப்பு பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

கரூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான கோப்பில் இன்று வரை கவர்னர் கையெழுத்திடாததன் மர்மம் என்ன? கவர்னர் மாளிகை 6.7.2023 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான கோப்பு எதுவும் வரவில்லை என்று கூறப்பட்டது.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த பிறகு தற்போது 15.5.2023 அன்று கோப்பு வந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது கவர்னர் பொய் சொல்வது தெரிகிறது.

இப்படி இருக்கும்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதன் மர்மம் என்ன? இதற்கு பின்னணியில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இருக்கிறாரா? என்ற சந்தேகம் இருக்கிறது.

இந்த கேள்வியை நான் எழுப்பியதால் பா.ஜனதாவினர் தகராறு செய்தால் பரவாயில்லை. அ.தி.மு.க.வினர் ஏன் தகராறு செய்கிறார்கள்? அவர்களுக்கு ஏன் வலிக்கிறது?

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News